Tuesday, August 30, 2005

N'awleans Jazz: Sinkin' in the Rain

'04 ஜூன், 17 11:00 மநிநே.




பிறந்த ஊரைப்போல, படித்த ஊர்களும் நெஞ்சிலே நின்று கொள்கிறன. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் நெ'ஓர்லின்ஸ் அப்படியாகப் பிடித்துக்கொண்டது. பிரெஞ்சுச்சதுக்கம்; தெருவண்டி எனப்படும் 'ட்ராம்'; கேஜன் - க்ரியோல் உணவு; ஜாஸ் - அக்காடியன் இசை; மாடி க்ரா; மிஸிஸிப்பி ஆறு; பொஞ்சட்ரீன் ஏரி; சார்ல்ஸ் வீதிமருங்கு வீடுகளின் கலை; புதைகுழிகள்; ஓடபேன் பூங்கா; உவூடு மந்திரக்காரர்கள் & ஜாஸ் மரணவூர்வலங்கள்; எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் நகரமத்தி ஸுப்பர்டோம் ........................ கூடவே, கோடைகளின் ஓடவைக்கும் தென் திசைப்பெரும்புயல்.

அமெரிக்காவிலே பதிவு செய்யப்பட்ட வரலாற்றிலே மூன்றாவது மிகமோசமான புயலாக, முந்தநாள் கத்ரீனா நெ'ஓர்லியன்ஸினை உலுப்பி எழுப்பியிருக்கின்றது. அடிப்படையிலேயே கொஞ்சம் மழை பெய்தாலும், ஆடிப்போகும் ஊர் நெ' ஓர்லியன்ஸ். பிரெஞ்சுக்காரர், சதுப்புநிலத்திலே துறைமுகவசதிக்காக மிஸிஸிஸிப்பி ஆற்றுமுகத்துவாரத்திலே நிரப்பிக்கட்டிய நகர்; ஒரு புறம் மிஸிஸிப்பி ஆறு; மறு புறம் கடல், மூன்றாவது பக்கம் கடலோ எனப் பிரமிக்கவைக்கும் 24 மைல் நீளத் தொடர்பாலம் குறுக்கோட, பொஞ்சட்ரீன் ஏரி. இவையிடையே, இவற்றின் மட்டத்துக்கு ஆறடி கீழ்த்தாழ, நெ' ஓர்லியன்ஸ் நகர். ஊருக்குள்ளே வரும் நீரை உறுஞ்சி அனுப்ப, ஒன்றோ இரண்டோ மட்டுமே மழைநீரகற்றும் குழாய்களுடனான வசதி; எப்போதும், பெரும்புயலுக்கு, நகர் "கூழ்ப்பானை" (Soup Bowl) என வர்ணிக்கப்படும். ; மேலும், கடல்மட்டத்துக்குக் கீழான நிலையிலே இருப்பதாலே, நிலமட்டத்துக்கு மேலே கல்லறைகளிலே புதைக்கப்படும் பிணங்கள் வெளியே மிதப்பதும் அவற்றினை மீண்டும் எடுத்துப்புதைப்பதும் என்ற மிகவும் மனவழுத்தம் தரக்கூடிய சம்பவங்களும் ஒவ்வோர் ஆண்டிலும் நடக்கும். அருந்தப்பிலே '1998 இலேயும் '2002 இலேயும் நகர் தப்பியது. இந்த முறை அந்தளவுக்குத் தப்பிக்கும் வாய்ப்பிருக்கவில்லையென்றாலுங்கூட, எண்ணியதிலும்விடப் பரவாயில்லையென்ற நிலையிலே ஓரளவு திருப்தியடைந்திருக்கின்றார்கள்.

புயலோடு வரும் அபாயங்கள் காற்றும் மழையும் சம்பந்தப்பட்ட அபாயங்கள்தான்; இவை குறைத்து மதிப்பிடப்படமுடியாது; ஆனால், அதன்பின்னாலே ஆற்றுமண்தடுப்போ, ஏரிமண்தடுப்போ உடைத்தால் வரக்கூடியதுதான் பெருமபாயம்; நேற்றிரவு, பொஞ்சரிட்டன் ஏரியிலே இப்படியாக உடைப்பு நிகழ்ந்திருக்கிறது. இயன்றவரை உடனடியாக, மின்சார, தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக்கொண்டாலுங்கூட, வெள்ளத்துடன் குடிநீர்வசதி, கழிவகற்றல் வசதி, நோய்த்தொற்று என்பன பெரிய சிக்கல்களாக இருக்கும்; சரியான அழிவு விபரங்கள், அங்கும் நேரடித்தாக்குதலுக்குட்பட்ட, மிஸிஸிப்பி மாநிலத்தின் ப்லொக்ஸி நகரிலும் மதிப்பிட்டுமுடியவில்லை.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலே இருக்கும் திட்டமிடல் வசதிகளாலே (FEMA போனற அரசமைப்புகளாலே)இவ்வழிவுகள் வளர்முகநாடுகளிலே ஏற்படுவதிலும்விடக் குறைவானதாகவே இருக்குமென்றபோதிலும், "This is our Tsunami" என்றவகையிலே இம்மாநிலத்தார் சொல்வதிலும் உண்மை ஓரளவுக்கு உண்டு; அமெரிக்காவின் வறுமையான மாநிலங்களிலே, தென்திசைக்குடா அடுத்த பெருஞ்சாலை 10 ஊடறுத்தோடும் நெ'ஓர்லியன்ஸ் இருக்கும் உலூயிசியானா மாநிலம், மிஸிஸிப்பி மாநிலம், அதையடுத்த அலபாமா மாநிலங்கள் அடங்கும். கலிபோர்னியா நிலநடுக்கத்துக்கும் மஸாஸுஸெட்ஸ் பனிப்புயலுக்கும் புளோரிடா மழைப்புயலுக்கும் செய்ததுபோல, செலவழிக்கக்கூடிய வசதி இம்மாநிலங்களிடமில்லை. அந்நிலையிலே இம்மாநிலங்கள் மீண்டும் பழையநிலைக்கேனும் நிமிர்ந்தெழுவது மிகவும் பிரயத்தனப்படவேண்டியிருக்கும்.

நெ'ஓர்லியன்ஸுக்கும் அதற்கு மேற்கிலே இடெக்ஸ்ஸாஸ் மாநிலம் நோக்கிப்போகும் உலூசியானாவின் தலைநகரான பட்டன்ரூச்சுக்குமிடைப்பட்ட பிரதேசம், புற்றுநோய்த்துண்டமென, அப்பிரதேசங்களின் வேதியற்றொழிச்சாலைகள் குறித்துக் கருதப்படும்; இவ்வேதியற்றொழிச்சாலைகளும் மெக்ஸிகோகுடாவிலிருக்கும் எரிபொருளகழ்வும் சுத்திகரிப்பும் உலூயிஸியானாவின் சூழலுக்கான அக்கறையுள்ளவர்களினாலே எப்போதும் குற்றம் சாட்டப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. இவ்வேதியற்றொழிச்சாலைகளிலே புயல் சேதமேற்படுத்தின், புயலின் அளவையிட்டும் வேதியமப்பொருளின் தன்மையையிட்டும் பாதிப்பு எவ்வளவு பிரதேசத்திற்கிருக்கும், அந்நிலையிலே எவ்வாறு மக்களை வெளியேற்றுவதென்பதெல்லாம் குறித்து ஆய்வுகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால், ஆய்வுகளின் முடிவுகளின்பின்னான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தனியே அறிவியல், சமூகவியல் மட்டும் சார்ந்த விடயமில்லையே; உள்ளூர் அரசியலும் திறைசேரிப்பொருள்நிலையும் தீர்மானிக்கிற சங்கதிகள் இவை. தற்காலிகமாக, எரிபொருள் உற்பத்தி, சுத்திகரிப்பு, விநியோகம் தடங்கிப்போயிருப்பதால், ஏற்கனவே அமெரிக்காவிலே ஏறிநிற்கும் எரிபொருள்விலை இன்னும் ஏறுமயில் ஏறிவிளையாடும்.

உலூஸியானாவின் தென்மேற்குப்பகுதிகளிலே, அமெரிக்காவின் சீனியுற்பத்தியிலே முக்கியம் வகிக்கும் உலூயிஸியானாவின் கரும்பு விவசாயப்பகுதி. இவை 1992 இன் அண்ட்ரூ புயல் போல இல்லாது, தப்பி, நெ' ஓர்லியன்ஸின் கிழக்குப்பகுதியே சேதமடைந்திருக்கின்றது. ஏற்கனவே இறக்குமதியாகும் சீனியினாலே நொடிந்துபோயிருக்கின்றோமென உலூயிசியானாவின் சீனியுற்பத்தியாளர்கள் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கையிலே, இப்புயலும் சேதமேற்படுத்தியிருப்பின், மாநிலத்துக்குப் பெரும் பொருளாதாரநட்டமே.

ஆனால், உலூயிசியானாவுக்கு, "தனக்கு வந்தது மிஸிஸிப்பியோடு போனது" என்ற நிலையிலே நிம்மதி.


'05 ஓகஸ்ற், 30 12:00 கிநிநே.

Thursday, August 25, 2005

நியாசோவின் நியாயங்கள்



ஒவ்வொரு நாட்டின் அரசியலும் ஒவ்வொரு மாதிரி; ஈராக், இலங்கை அரசியல்கள், சண்டைப்படம், வெஸ்ரேன் படம் பார்ப்பது மாதிரி; பாக்கிஸ்தானுடையது, புராணப்படம் பார்ப்பதுபோல; அந்த வகையிலே, துருக்கிஸ்தானுடையதைப் பார்த்துக்கொண்டிருந்தால், நகைச்சுவைப்படம் பார்ப்பதுபோலத் தோன்றுகின்றது. ஒரே நகைச்சுவை அளவுகோலை வைத்துக்கொண்டு பார்த்தால், துருக்கிஸ்தான் அரசியலுக்குச் சமானமான பகிடிக்காட்சிகள், அமெரிக்க கிறீஸ்துவப்போதகர்களின் தொலைக்காட்சி ஒளிபரப்புகளிலே (அவற்றினை நான் செல்லமாக, "கொமடி ச(ன்)னல்கள்" என்று சொல்லிக்கொள்வதுண்டு) மட்டுமே கிட்டுமெனத் தோன்றுகிறது.

துருக்கிஸ்தான் அதிபர் நியாசோ கிட்டத்தட்ட, சோ. ராமசாமியின் முகமது பின் துக்ளக் நாடகத்திலே நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துக்ளக் போடும் சட்டக்கூத்துவகையிலே மெய்யாகவே நின்று நிருத்தியமாடுகின்றார். துக்ளக் செய்யும் கூத்துக்கள்போலவே (இந்தி-ஆங்கிலம் என்பவற்றுக்கிடையே தேசியமொழியேதெனப் பிரச்சனை வராமலிருக்கப். பாரசீகமொழியைத் தேசியமொழியாக்குவது, 'கிளிஜோஸ்யகாரி'யை அமைச்சராக்கி, கிளியைச் சட்டங்களைத் தேர்ந்தெடுக்கவிடுவது, "நான் அமெரிக்கா பார்க்கவேண்டாமா?" எனத் தன் அமெரிக்கப்பயணத்துக்கு ஒரு வாதம் வைப்பது, கர்நாடகாவுக்கும் மஹாராஷ்ராவுக்குமிடையேயான நிலப்பிரச்சனையைத் தீர்க்கச் சர்ச்சைக்குரிய நிலத்தினைத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்தல், தன் கட்சி அரசமைக்க வேண்டுமென்பதற்காக, கட்சியிலே சேரும் இருநூற்றுச்சொச்சம் பேரும் துணைப்பிரதமர்கள் என்று சொல்வது, ஆனால், அனைத்து 'இலாகா'களும் தன் வசமே இருக்குமென்பது) நியாசோவும் சட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றார்; பெருநாடகங்களும் நிருத்தியங்களும் தடை செய்யப்படுகின்றன (அவுரங்கசீப்பை மிஞ்சிவிடுவார்); நீள்சடையும் தாடியும் தடைசெய்யப்படுகின்றன (ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை என சனநாயகநாடுகள் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்); எல்லாப் பொதுவிடங்களிலும் ஒளியக்கண்காணிகள் (பீப்பிங்ரொம்ஸ், வொயேஜர்களுக்கு வேலையில்லாமற் போகின்றது); தலைநகர் தவிர்ந்த அனைத்துப்பகுதிகளிலும் வைத்தியசாலைகள் மூடப்படுகின்றன (அமெரிக்காவிலே மூடப்படும் இராணுவம்சார் தொழிற்றளங்களுக்காகக் கவலைப்படும் ஊர்மக்கள் பார்த்துத் தம்மைத்தானே தேற்றிக்கொள்ளலாம்); நாட்காட்டிகளிலே மாதங்கள் அதிபரின் பெயரிலும் அவர் அன்னை பெயரிலும் மாற்றப்படுகின்றன (அப்படியே ஜூலியஸ் சீஸர், ஒகஸ்டஸ் சீஸர் உயரத்துக்குத் தன்னை உயர்த்திக்கொள்கிறார்)... எல்லாவற்றுக்கும் மேலாக, விழாக்களிலும் வைபவங்களிலும் இசையைப் பதிவு செய்து ஒலித்தட்டாகப் போடுவது தடைசெய்யப்படுகின்றது (அம்மணி ஆல்ஸி ஸிம்ஸன் இப்போதைக்கு துருக்கிஸ்தானிலே இசைநிகழ்ச்சி நடத்துவது குறித்து எண்ணிப் பார்க்கத்தேவையில்லை).

நியாசோவின் கூத்துக்களைப் பார்க்கும்போது, Z படத்தின் முடிவிலே நாட்டிலே இராணுவ அரசு தடைபோடும் சங்கதிகளின் பட்டியல்தான் ஞாபகம் வருகின்றது; நீள் முடி, துள்ளிசை.

பாடப் பயந்தாலும்,உதடு விரித்துச் சிரிக்கக் கொடுத்த வைத்த துருக்கிஸ்தான் மக்கள். அதிபரின் இலவசக்கூத்தைப் பார்த்தாலே போதுமே; நாடகங்களும் நிருத்தியங்களும் காசு கொடுத்துப் பார்க்கத்தான் வேண்டுமா?

'05 ஓகஸ்ற், 25 வியா. 16:24 கிநிநே.

Thursday, August 04, 2005

மூர்க்கத்தின் உச்சக்கட்டம்

இன்று செய்தியில் இரண்டு வினை-எதிர்வினையான தொடர்சம்பவங்கள்; ஒன்று, பாலஸ்தீனத்தில்; மற்றது, ஈழத்தில். இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள். இரண்டு நாடுகளும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள். இரண்டிலும் ஆக்கிரமிப்பு இராணுவங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள், தாமும் தம்வேலைகளுமாக இருந்த அப்பாவிக்குடிமக்களைச் சுட்டுக்கொன்றிருக்கின்றார்கள்; கொன்றதற்கான காரணங்கள் இதுவரை இவைதானெனச் சரியாகச் சுட்டப்படவில்லை; வெறும் இனக்காழ்ப்புக்கூடக் காரணமாகவிருந்திருக்கலாம். அடுத்ததாக, இரு சம்பவங்களிலுமே, ஆக்கிரமிப்புப்படைகள் இவ்வெதேச்சையான கொலைகளைச் செய்த தம் படைவீரர்களை உடனடியாகக் காப்பாற்றியிருக்கின்றன. விளைவாக, இந்நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருந்த அந்நிலத்துக்குரிய பூர்வீகமக்கள் கொதித்துப்போய், உடமைகளை எரித்தல் கொளுத்துதலுக்குமப்பால் மிக மூர்க்கமாகச் செயற்பட்டிருக்கின்றார்கள். பலஸ்தீனத்திலே, பாதுகாப்பாக வைக்கப்பட்ட யூத விடலை இராணுவவீரனை, இராணுவப்பாதுகாப்பினையும் மீறி உடைத்துக்கொண்டுபோய்க் கொன்றிருக்கின்றார்கள்; ஈழத்தில், நிகழ்வைப் பார்வையிட, சட்டத்தினை நிலைநாட்ட(வென்று சொல்லிக்கொண்டு) வந்த நகர்காவல் மேலதிகாரியினைக் கடத்திப்போய்க் கொன்றிருக்கின்றார்கள்.

"ஒரு கண்ணுக்கு இன்னொரு கண்ணென்பது பயனாகாது" என்பதை, காலகாலமாக மறைமுகமாக அழுத்தப்பட்டும் உடனடிச்சம்பவத்தினாலே நேரடியாகப் பாதிக்கப்பட்டும் ஆத்திரத்தின் உச்சத்திலே இருப்பவர்களுக்குச் சொல்வதிலே ஏதும் பயனிருக்குமென்றோ நியாயமிருக்குமென்றோ நான் நம்பவில்லை. ஆனால், இப்படியான, அநாவசியமான எதிர்வினைக்கொலைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயனளிக்கப்போவதில்லை; ஆக, தமக்கான பாதிப்பினைச் சுட்டிக்காட்டி அதன்மூலம் நியாயமான அனுதாபத்தினை மற்றவர்களிடம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினையும் இழக்கின்றார்களென்றே தோன்றுகின்றது. இன்னுமொருபடி கீழேபோய், பாதிப்பினைச் செய்தவர்களுக்கும் தமக்கும் ஏதும் வித்தியாசமில்லையென்ற அபிப்பிராயத்தினைக்கூட வெளியுலகுக்கு ஏற்படுத்திவிடக்கூடும். எல்லாவற்றுக்கும்மேலாக, ஈழச்சம்பவத்திலே, சம்பந்தப்பட்ட நகர்காவலதிகாரி இச்சம்பவத்திலே குடிமக்களுக்கு ஏதும் கெடுதல் செய்ததாக செய்திகளை வாசித்தவரையிலே தெரியவில்லை; அந்நிலையிலே, இராணுவத்தின் கூத்துக்கு, தன் கடமையைச் செய்யவந்த ஒரு நகர்காவலதிகாரியினைக் கொல்வது எந்தவிதத்திலும் நியாயப்படுத்தமுடியாததாகும். நகர்காவலதிகாரியினை வேறொரு காரணத்துக்கு வேறொரு சந்தர்ப்பத்திலே கொன்றவர்கள் எதிர்கொண்டிருக்கலாம். ஆனால், இச்சந்தர்ப்பத்திலே எதுவுமே கெடுதல் செய்யாது தன் கடமையைச் செய்யவந்த அதிகாரியினைக் கொன்றதற்கு அவரைக் கொலை செய்தவர்கள் வெட்கப்படவேண்டும்; வருத்தப்படவேண்டும். இவ்வெதிர்ச்செய்கை முறையற்றது மட்டுமல்ல, கெடுதலானதுங்கூட. இதனாலே முழு ஈழச்சமுதாயத்துக்குமே பின்னடைவுதான் எஞ்சக்கூடும். இந்தப்பின்னடைவினை நேரடியாக அறிய விரும்புகின்றவர்களை, வேண்டுமானால், நாளைய இலங்கை, இந்திய ஆங்கிலப்பத்திரிகைகளை வாசிக்கக்கேட்டுக்கொள்கிறேன்.

'2005 ஓகஸ்ற், 04 வியா. 15:14 கிநிநே.