Thursday, March 31, 2005

பிபிஸி தமிழோசை 03/31/2005

பிபிஸி தமிழோசை
2005 மார்ச், 31
'ஜேவிபியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பேரினவாதக் கட்சியாக பார்க்கவில்லை'- மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழு உறுப்பினர் வரதராஜன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தேசிய மட்ட மாநாடுகளுக்கு இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியாக கருதப்படும் ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி) அழைக்கப்பட்டிருப்பது இரு நாட்டு அரசியல் வட்டாரங்களில் முக்கியமான விவகாரமாக பார்க்கப்படுகிறது.

இந்த மாநாடுகளுக்கு தற்போதே முதல் தடவையாக ஜேவிபி அழைக்கப்பட்டுள்ள போதிலும், ஜேவிபியுடன் இந்த இரண்டு இடதுசாரிக் கட்சிகளுக்கும் நீண்ட காலமாகவே நட்பு ரீதியான தொடர்பு இருப்பதாகவும், இலங்கையின் நிலைமையிலே ஜேவிபியை தாம் ஒரு இடதுசாரிக் கட்சியாக கருதுவதானாலேயே அதனுடன் நெருக்கமான தொடர்பை தொடர்ந்து வைத்திருக்க விரும்புவதாகவும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான டபிள்யூ. ஆர். வரதராஜன் கூறியுள்ளார்.

ஜேவிபியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளை வைத்து அவர்களை ஒரு நேச சக்தியாக தாம் பார்ப்பதாகவும் அவர் குறிபிட்டார்.

ஜேவிபியை ஒரு சிங்கள இனவாத அமைப்பாக தனித் தமிழீழம் கோரும் அமைப்புகளே பார்க்கின்றன என்றும், ஆனால் பொதுவாக இலங்கைத் தமிழர்களின் விமர்சனம் அதுவல்ல என்றும் வரதராஜன் கூறினார்.

ஒரு பேரினவாத அமைப்பாக தாம் ஜேவிபியை பார்க்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சியின் கீழேயே தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜேவிபி வலியுறுத்தி வருவது உங்களுக்கு தவறாகப் படவில்லையா என்று கேட்டதற்கு பதிலளித்த வரதராஜன் அவர்கள், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி பெற்ற தமிழ் பகுதிகள் என்ற அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக இருப்பதாகவும், ஜேவிபியின் இது தொடர்பான நிலைப்பாடு இறுதியானது அல்ல என்பதே தமது கருத்து என்றும், அது தொடர்பில் ஜேவிபியை சாதகமான நிலைப்பாட்டை எடுக்க வைப்பதில் தாம் வெற்றி பெறுவோம் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச பிரச்சினைகளில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நிலை எடுக்கக்கூடிய கட்சிகள் மற்றும் மூன்றாவது உலக நாடுகளிடையே இறையாண்மையை பாதுகாக்க போராடும் கட்சிகள் என்ற அடிப்படியிலேதான் தாம் சர்வதேச மட்டத்தில் ஏனைய கம்யூனிஸ நிலைப்பாடு எடுக்கக்கூடிய கட்சிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் ஆனால் உள்நாட்டு விவகாரங்களில் தாம் பெரிய அளவில் தலையிடுவதில்லை என்றும் வரதராஜன் கூறினார்.

ஜேவிபியின் நிலைப்பாட்டை தான் நியாயப்படுத்த விரும்பாத போதிலும், அங்கு பல சந்தர்ப்பங்களில் ஜேவிபி எடுக்கும் நிலைப்பாடு என்பது விடுதலைப் புலிகள் எடுக்கும் நிலைப்பாட்டின் எதிரொலியாக அமைந்துவிடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி: பிபிஸி தமிழோசை

0 Comments:

Post a Comment

<< Home